கரூர் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
கரூர் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் கிருஷ்ணதேவராயர் கட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டிற்கான இந்தத் திருவிழா சனிக்கிழமை மாலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வுடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து நள்ளிரவு முதல் அதிகாலை வரை கர்நாடகம் மற்றும் கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் வந்து குவிந்தனர்.
இதனையடுத்து, அதிகாலையில் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணியளவில் கோயில் பூசாரி முத்துசாமி தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். பின்னர் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையின் மீது தேங்காய் உடைக்கப்பட்டது. இதில் சிலருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவர்களுக்கு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.