சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்!
சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
பெண் காவலரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி நகர காவல் ஆய்வாளர் உதயக்குமார் தலைமையிலான அதிகாரிகள், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் உள்ள அவரிடம் வழங்கியுள்ளது.
புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கர், மதுரை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டதற்கான உத்தரவு நகலை சிறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ஆம் தேதி, தேனியில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குண்டர் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டர் தடுப்பு சட்டத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி ரத்து செய்தது.
இந்நிலையில், தற்போது சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.