சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்து தவறானது என்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுகவை விமரிசித்து ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பது தவறுதான் என்று தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார். அவர் பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், அது கட்சியின் கருத்தாகவே பார்க்கப்படும் சூழல் உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளையில், கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனை நீக்க வேண்டும் என்று யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அவர் பேசியிருக்கும் விஷயம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், புத்தகத்தின் ஆசிரியரும் விசிக துணைப் பொதுச் செயலருமான ஆதவ் அர்ஜூனா பேசுகையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும் என்று ஆதவ் அர்ஜூனா திமுகவை விமர்சிப்பது போல பேசியிருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆளும் திமுக அரசுடன் கூட்டணியில் உள்ள நிலையில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் இவ்வாறு பேசியிருந்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், தொல். திருமாவளவன், அவர் பேசியது தவறு என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.