முகப்பு
தமிழ்நாடு

திண்டுக்கல்: மருத்துவமனையில் தீ விபத்து! 5-க்கும் மேற்பட்டோர் பலி!

மருத்துவமனை லிஃப்ட்டின் உள்ளே மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அச்சம்!

Updated On : 12 டிசம்பர் 2024, 10:59 pm IST
திண்டுக்கல்: மருத்துவமனையில் தீ விபத்து
பகிர்:

திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில்(சிட்டி ஹாஸ்பிடல்) வியாழக்கிழமை(டிச. 12) இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் தீ பரவியதால் மருத்துவமனையின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டு பரிதவித்தனர்.

இந்த கோர விபத்தில் மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டில் இருந்த 5-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாததால் தீயில் கருகியும் புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர். அதில் ஒரு சிறுவனும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

4 மாடிகளைக் கொண்ட மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டின் உள்ளே மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென்றே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது. லிஃப்டில் மாட்டிக்கொண்டவர்கள் நோயாளிகளின் உடன் இருந்தவர்கள் மற்றும் அவர்களைப் பார்க்க வந்தவர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

தீ விபத்து குறித்த தகவலறிந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உள்பட அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனையிலிருந்த நோயாளிகளும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தீ பரவியதும் மின் விநியோகம் தடைபட்டதால் லிஃப்ட் பாதியில் நின்றதன் காரணமாகவே உள்ளே இருந்தவர்களால் வெளியேற முடியவில்லை என்றும் அங்கிருந்து வரும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.