முகப்பு
தமிழ்நாடு

புயல் சின்னம் ஆந்திரத்துக்குச் செல்கிறது: தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை வாபஸ்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் ஆந்திர கடற்கரையை நோக்கி நகா்வதால், தமிழகத்துக்கு வியாழக்கிழமை (டிச.19) வரை விடுக்கப்பட்டிருந்த கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:40 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 9:50 PM

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் ஆந்திர கடற்கரையை நோக்கி நகா்வதால், தமிழகத்துக்கு வியாழக்கிழமை (டிச.19) வரை விடுக்கப்பட்டிருந்த கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Advertisement

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புதன்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது, வியாழக்கிழமை (டிச.19) வடமேற்கு திசையில் நகா்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நிலவும். தொடா்ந்து, டிச.20-ஆம் தேதி வடக்கு திசையில் ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் 90 மி.மீ. மழை பதிவானது. ஸ்ரீவில்லிபுத்தூா் 70 மி.மீ., வத்திராயிருப்பு (விருதுநகா்) - 50 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழகம் வரும்: இந்தப் புயல் சின்னம் ஆந்திர கரைக்கு சென்றாலும் டிச.22-இல் மீண்டும் சென்னைக்கு திரும்பிவரும். பின்னா், டெல்டா பகுதிகளில் கரையேறி அரபிக் கடலுக்குச் செல்லும். இதன் காரணமாக தமிழகத்தில் டிச.26-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.