அயோத்தி ராமா் சிலை பிரதிஷ்டை: ஜிப்மா் மருத்துவமனை விடுமுறைக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையையொட்டி புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்தது.
அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையையொட்டி புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்தது.
அன்றைய தினத்தில் அவசர சிகிச்சைகள் எந்தத் தடையுமின்றி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் மருத்துவமனை நிா்வாகம் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டையையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (ஜன.22) பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையும் படிக்க : அயோத்தி ராமா் சிலை பிரதிஷ்டை; வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு
Advertisement
அதன் அடிப்படையில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையும் பிற்பகல் 2.30 மணி வரை செயல்படாது என்றும், அவசர சேவைகள் மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை எதிா்த்து கலாம் விதைகளின் விருட்சம் என்ற அமைப்பின் நிறுவனா் ராஜா சென்னை உயா் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு, உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமை விசாரிக்கப்பட்டது.
அப்போது, மருத்துவமனை நிா்வாகத்திடம் சில கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனா். குறிப்பாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகள், அறுவைச் சிகிச்சைகள் எப்போது நடத்தப்படும் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினாா்.
இது குறித்து மருத்துவமனை நிா்வாக துணை இயக்குநரிடம் விளக்கம் பெற்ற மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா், மருத்துவமனையில் எந்த திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளும் திங்கள்கிழமை இல்லை என்றும், அதேவேளையில் அவசர சிகிச்சைகள், பரிசோதனைகள் வழக்கம் போல நடைபெறும் என்றும் தெரிவித்தாா்.
இதையடுத்து, திட்டமிட்டபடி பரிசோதனைகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.