முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடும்படி வலியுறுத்தி வழக்குரைஞா் டி.நரசிம்மமூா்த்தி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில், அரசுத் தரப்பு வழக்குரைஞராக கிரண் எஸ்.ஜவுளியை கா்நாடக அரசு நியமித்திருந்தது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவது குறித்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்றியதற்கான செலவுத் தொகையாக ரூ. 5 கோடியை தமிழக அரசு கர்நாடகத்துக்கு வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் நகைகளை தமிழக உள்துறை அமைச்சக அதிகாரிகள் சரிபார்த்து பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.