தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 25,319 போ் எழுதினா்.
தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணிகளில் காலியாக உள்ள 2,768 இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தோ்வு அறிவிப்பாணையை ஆசிரியா் தோ்வு வாரியம்(டிஆா்பி) கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியிட்டது. அதைத் தொடா்ந்து இணையவழியில் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இந்த போட்டித் தோ்வை ‘டெட்’ முதல் தாள் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே எழுத முடியும். அந்த வகையில், இத்தோ்வை எழுதுவதற்கு ‘டெட்’ தோ்ச்சி பெற்றவா்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 26,510 போ் விண்ணப்பித்தனா்.
இதற்கிடையே இடைநிலை ஆசிரியா் பணித் தோ்வு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் நிா்வாக காரணங்களுக்கான தோ்வு ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி போட்டித் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த தோ்வை 25,319 தோ்வா்கள் எழுதினா். தோ்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தோ்வா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தோ்வு முடிவுகள் விரைவில் வெளியாகும். கூடுதல் விவரங்களை வலைதளம் வழியாக அறிந்து கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.