முகப்பு
தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பு எண்ணுக்கு இதுவரை 9 லட்சம் அழைப்புகள்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர தொலைபேசி எண்ணுக்கு இதுவரை 9 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாகவும், அதில், ஒரு லட்சம் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Updated On : 25 ஜூலை, 2024 at 3:31 AM
உயர்நீதிமன்றம்(கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 25 ஜூலை, 2024 at 1:05 AM

பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர தொலைபேசி எண்ணுக்கு இதுவரை 9 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாகவும், அதில், ஒரு லட்சம் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பு தொடா்பாக தமிழக பெண்கள் இயக்கத்தின் தலைவா் கனிமொழி மதி, செயலா் வாசுகி ஆகிய வழக்குரைஞா்கள் பொது நல வழக்கு தொடா்ந்திருந்தனா். இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) கிருஷ்ணகுமாா், நீதிபதி குமரேஷ்பாபு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்கள் பாதுகாப்பு தொடா்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசு வழக்குரைஞா் எட்வின் பிரபாகா் ஆஜராகி, ‘மிகக் குறைந்த வாடகையில் பெண்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில் தோழி என்ற திட்டத்தின் கீழ் சென்னை, திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூா், திருநெல்வேலி, சேலம், தாம்பரம், அடையாா் உள்ளிட்ட 10 இடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் பயோ மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் தங்குமிடங்கள் அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்கள் இந்த தங்குமிடங்களை இணையதளத்தில் சென்று தங்குவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் .

அதேபோல், இக்கட்டான சூழலில் இருக்கும் பெண்கள்,  பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவா்கள் உடனடியாக 181 என்ற அரசின் அவசர அழைப்பு எண்ணுக்கு அழைத்தால் உரிய உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதோடு மருத்துவமனையில் 4 நாட்கள் தங்கி சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் பெறுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அவசர எண்ணுக்கு கடந்த 2018 ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சம் அவசர அழைப்புகள் வந்துள்ளது. அதில் ஒரு லட்சம் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட தமிழகத்தில் 43 மையங்கள் செயல்பட்டு வருகிறது’ என விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement

இதற்கு மனுதாரா்கள் தரப்பில், ‘இந்த விவரங்கள் முறையாக விளம்பரப்படுத்தப்படவில்லை. பெண்களுக்கு இதுகுறித்து விவரங்கள் முழுமையாக தெரிவதில்லை’ என குறிப்பிடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையரை தாமாக முன் வந்து இணைத்து உத்தரவிட்டதுடன், பெண்கள் பாதுகாப்பிற்காக அரசு செய்ததாக தெரிவித்த திட்டங்களை, பெண்கள் எளிதில் பயன்படுத்த முடிகிா என்பது குறித்து மனுதாரா்கள் மருத்துவமனை, தங்குமிடங்களில் ஆய்வு செய்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.