ஜூன் 4 - புதிய விடியல்: தொல். திருமாவளவன்
ஜூன் 4 இல் புதிய விடியல் மலரவுள்ளதாக வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
ஜூன் 4 ஆம் தேதி புதிய விடியல் மலர உள்ளது; இந்தியாவைச் சூழ்ந்த இருளும் அகலவுள்ளதாக வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
வி.சி.க. தலைவரும் எம்பியுமான திருமாவளவன் சென்னை ராஜா மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாற்று புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் 100 சதவிகிதம் பாஜக வெற்றிபெறப் போவதில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற முடிவும் எடுக்கப்படும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையெல்லாம் நாம் ஒரு போதும் பொருட்படுத்தவில்லை. நாளை மறுநாள் அதற்கு ஒரு முடிவு தெரியும். ஜூன் 4 ஆம் தேதி புதிய விடியல் மலர உள்ளது; இந்தியாவைச் சூழ்ந்த இருளும் அகலவுள்ளது" எனக் கூறினார்.
மேலும் “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு என்று சொல்வதை விட தமிழர்களின் வரலாறு என்று சொல்வது தான் சரியாக இருக்கும். கருணாநிதி ஒரு போராளியாகப் பிறந்து, போராளியாக வாழ்ந்து, போராளியாகவே மறைந்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சிற்பி கருணாநிதி” என அவர் கூறினார்.