பர்கூரில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்பிலான துணிகள் சேதம்
தமிழ்நாடுபர்கூரில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்பிலான துணிகள் சேதம்
பர்கூரில் துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேருந்து நிலையம் எதிரே, ஜெகதேவி சாலையில், சின்ன பர்கூரைச் சேர்ந்த வடிவேலன் (41) என்பவர், அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தை ஓராண்டாக வாடகைக்கு எடுத்து ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
இந்த மண்டபத்தின் ஒரு பகுதியை கிடங்காகவும் பயன்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, இந்தக் கடையிலிருந்து கரும்புகை வருவதை பொதுமக்கள் கண்டனர். இதுகுறித்து காவல் துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பர்கூரில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் நிகழ்விடத்திற்கு சென்று தீயை அணைக்க முயன்றனர். தீ, மண்டபம் முழுவதும் பரவிதை அடுத்து, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஓசூரில் இருந்தும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். கடந்த, ஏழு மணி நேரமாக தொடர்ந்து எரிந்த தீயை கடும் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
இந்த விபத்தில், பல கோடி மதிப்பிலான துணிகள், சேதம் அடைந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். தீ விபத்து குறித்து, பொதுமக்கள் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.