முகப்பு
தமிழ்நாடு

தஞ்சை மாவட்டத்தில் திருவோணம் வட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவோணம் வட்டத்தை உருவாக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 2 மார்ச், 2024 at 10:31 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவோணம் வட்டத்தை உருவாக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா், தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டாா். ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள திருவோணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அத்தியாவசியச் சேவைகளான ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும், வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக 34 கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்துக்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன் இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக அவா்கள் நாள் முழுவதும் அலையவும் வேண்டியுள்ளது. இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு வந்ததைத் தொடா்ந்து அவற்றை உடனடியாகக் களைவதற்கு முடிவு செய்தாா். அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய 2 வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூா், திருநெல்லூா், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தை உருவாக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதற்குரிய அரசாணை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.