முருகப் பெருமானின் அருபடை வீடுகளில் முதன்மையான திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி முருகன் கோயிலின் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு முன்னதாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்.
பழநி முருகன் கோயிலில் வழங்கப்படும் பழநி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. உலக அளிவில் பிரபலமான ஒன்றாகும். இந்த பஞ்சாமிர்தமானது வாழைப்பழம், வெல்லம், பேரீச்சம் பழம் பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தத்தை சாப்பிடுவதன் மூலம் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இதற்கு முன்னதாக, கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் தயாரிக்கும் தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்து வந்தனர். இருப்பினும் உணவுப்பொருளாக இருப்பதால் தயாரிக்கும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அறநிலைத்துறையின் ஆலோசனையின் படி பழநி முருகன் கோயிலில் தயாரித்து விநியோகிக்கப்படும் பஞ்சாமிர்தம் 15 நாள்கள் வரை பயன்படுத்தலாம் என்று டப்பாவில் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், பழநி கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்திலிருந்து, கெட்டுப்போன 3000 கிலோ பஞ்சாமிர்தத்தை கொட்டுவதற்காக எடுத்துச் சென்ற லாரியை இந்து அமைப்பினர் சிறைப் பிடித்து, போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.