தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுகவினர் இழிவுபடுத்தியதாகவும், காமராஜரின் திட்டங்கள் முன்மாதிரியானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கோவையில் நேற்று வாகனப் பேரணியில் ஈடுபட்ட மோடி, சேலத்தில் இன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்த கூட்டத்தில் மோடி பேசுகையில்,
“ஜெயலலிதாவை திமுகவினர் எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்பதை நினைத்து பாருங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
திமுகவும், காங்கிரஸின் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஊழலும், குடும்ப ஆட்சியும் செய்பவர்கள். தமிழகத்தில் திமுக 5ஜி நடத்தி வருகின்றது. அவர்களின் 5-வது தலைமுறையை ஆட்சிக்கு வர வேலை செய்கிறார்கள்.
மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை நினைவு கூர்கிறேன். அவர் மனது வைத்திருந்தால் பிரதமராகி இருப்பார். ஆனால், காங்கிரஸ் குடும்ப ஆட்சி அவரை வளரவிடவில்லை.
தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் காமராஜர். அரசியலில் நேர்மை என்றால் காமராஜர். அவர் உருவாக்கிய மாணவர் மதிய உணவுத் திட்டம் மிகப்பெரியது. ஏழை எளிய மாணவர்களுக்கு அவர் ஏற்படுத்திய இந்த திட்டம், மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்குவதற்கான வழிகாட்டுதலாக இருந்தது.” எனத் தெரிவித்தார்.