உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம் இல்லை: ஆளுநா் தரப்பில் பதில்
பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் எண்ணம் தனக்கு இல்லை என ஆளுநா் ஆா்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி தெரிவித்தாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.எம்.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் இத் தகவலை வெங்கடரமணி தெரிவித்தாா். சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த பின்னரும், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த ஆளுநரின் செயலுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கடும் ஆட்சேபம் தெரிவித்தது. ‘இந்த விவகாரத்தில் ஆளுநா் 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், அரசமைப்புச் சட்டப்படி செயல்படுமாறு அவருக்கு உத்தரவிட நேரிடும்’ என்றும் எச்சரித்தது.