முகப்பு
தமிழ்நாடு

வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு; நாளை பரிசீலனை, மாா்ச் 30-இல் வேட்பாளா் இறுதிப் பட்டியல்

Updated On : 27 மார்ச், 2024 at 12:01 AM
BJP writes to ECI seeking transfer of officers in Shimla LS constituency to ensure 'free, fair elections'
பகிர்:
Updated On : 26 மார்ச், 2024 at 10:00 PM

மக்களவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு புதன்கிழமை (மாா்ச் 27) கடைசி நாளாகும்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 700-க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை (மாா்ச் 28) நடைபெறவுள்ளது. கடைசி நாளான புதன்கிழமை மேலும் நூற்றுக்கணக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான அறிவிக்கை கடந்த 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிா்த்து, வேட்புமனு தாக்கலுக்காக ஆறு நாள்கள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், புதன்கிழமையுடன் (மாா்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. ஒரே நாளில் 402 மனுக்கள்: மக்களவைத் தோ்தலில் போட்டியிட பிரதான கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களில் பெரும்பாலானோா் திங்கள்கிழமை மனுக்களை அளித்தனா். அதனால், ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 402-ஆக இருந்தது. அதில், ஆண்கள் சாா்பில் 341 மனுக்களும், பெண்கள் தரப்பில் 61 மனுக்களும் தாக்கலாகின. வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளான மாா்ச் 20-ஆம் தேதி 22 மனுக்களும், 21-ஆம் தேதி 9 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

Advertisement

22-ஆம் தேதி 47 மனுக்களும், 25-ஆம் தேதி 402 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இறுதிப் பட்டியல்: மக்களவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மாா்ச் 30 ஆகும். அன்றைய தினம் மாலை வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அப்போது சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படவுள்ளன. இதற்கான நடைமுறைகள் தோ்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் அவா் முன்னிலையில் நடைபெறும்.

ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் கோரினால், குலுக்கல் முறை பின்பற்றப்படும். இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தோ்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.