பருமன் குறைப்பு சிகிச்சையால் இளைஞா் உயிரிழப்பு: விசாரணை அறிக்கை சமா்ப்பிப்பு
உடல் பருமன் குறைப்புக்கான அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞா் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை அறிக்கை
உடல் பருமன் குறைப்புக்கான அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞா் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை அறிக்கை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, திருவள்ளூா் நகரைச் சோ்ந்த ஹேமச்சந்திரன் (26) என்பவா் தனது உடல் எடையை (156 கிலோ) குறைக்க தனியாா் மருத்துவா் ஒருவரிடம் கலந்தாலோசனை பெற்றுள்ளாா். மருத்துவரின் அறிவுறுத்தலின்பேரில் பம்மலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவருக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென ஹேமச்சந்திரன் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா்கள், மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த குழுவினா் முதல்கட்ட விசாரணை அறிக்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளிடம் சமா்ப்பித்துள்ளனா். இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:
உடல் பருமன் குறைப்பு சிகிச்சை செய்த இளைஞரின் மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அறுவை சிகிச்சையில் எந்தத் தவறும் நிகழவில்லை எனத் தெரிகிறது. அறுவை சிகிச்சைக்கான உரிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. முழுமையான அறிக்கை கிடைக்கப் பெற்ற பிறகு அதன் பேரில் உரிய முடிவெடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.