ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை
ஆலங்குளம் அருகே நள்ளிரவில் லாரி ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை வடக்குக் காலணித் தெருவைச் சேர்ந்தவர் ராமையா மகன் பேச்சிக்குட்டி(23). வெளியூரில் தங்கி லாரி ஓட்டுநர் தொழில் செய்து வந்த இவர், சகோதரர் திருமணத்திற்காக தற்போது ஊருக்கு வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தனது வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் பேச்சிக்குட்டி, அவரது நண்பர்கள் முருகேசன், இசக்கிமுத்து, கனி செல்வன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினாராம்.
அப்போது, அதனைத் தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகையா மகன் சுரேஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சுரேஷ் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த சுரேஷின் உறவினர் சண்முகையா என்பவர் பேச்சுக்குட்டி வீட்டிற்குச் சென்று தகறாறில் ஈடுபட்டுள்ளார். தொடர்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
Advertisement
இந்நிலையில் இரவு சுமார் 11.30 மணி அளவில் தனது வீட்டு முன்பு நின்றிருந்த பேச்சிக்குட்டியை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி, கம்பு ஆகியவற்றுடன் வந்து மறித்து தாக்கியுள்ளது. அதில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பேச்சிக்குட்டி விலாவில் குத்தியுள்ளான். இதில் பேச்சிக்குட்டி குடல் சரிந்து நிகழ்விடத்திலேயே பலியானார். ஆலங்குளம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.