முகப்பு
தமிழ்நாடு

4 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை!

எந்தெந்த மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும்..

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:39 AM
ரெட் அலர்ட்
பகிர்:

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

நேற்று (அக். 15) காலை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ச்து மாலை 5.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று(அக். 16) காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 320 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 350 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் - தெற்கு ஆந்திர பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கு இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும்.

எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்..

இதன் காரணமாக இன்று(அக். 16) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தரமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் கனமழை பெய்யும்..

அக். 17ல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.18ல் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

இன்று வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பதிவான மழை

சோழவரம் 30 செ.மீ, சென்குன்றம் 28, ஆவடி 25, கத்திவாக்கம் 23, மணலி 21, திரு.வி.க.நகர் 19, கொளத்தூர் 13 செ.மீ மழையும் பெய்யுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.