தவெக மாநாட்டில் சிலர் மயக்கம்! முகாமில் முதலுதவி -ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை!
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களில் சிலர் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களில் சிலர் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர்.
அவர்களை காவல் துறை உதவியுடன் தொண்டர்கள் மீட்டு, அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்து வருகின்றனர்.
மேல் சிகிச்சைக்காக சிலரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், ஆனால், மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து ஆம்புலன் வெளியே செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலை பகுதியில் இன்று (அக். 27) மாலை நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள் வி. சாலை பகுதியில் குவிந்து வருகின்றனர்.
இதனால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வி. சாலை பகுதியில் இரு இடங்களில் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கான பார்க்கிங் அமைக்கப்பட்டிருந்தது. பகலுக்குள் அவை இரண்டும் நிரம்பியதால் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டன.
வெய்யிலால் மயக்கம்
சுமார் 7 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால் தொண்டர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு மாநாடு நடைபெறும் திடலுக்கு நடந்து சென்றனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 'கண் திறக்கப்பட்ட' நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!
வயதானவர்கள், பெண்கள் வர வேண்டாம் என்று விஜய் அறிவித்திருந்தாலும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.
மாநாட்டுத் திடலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமரத் தொடங்கிய கட்சித் தொண்டர்கள் வெய்யில் காரணமாக நாற்காலிகளைத் தலை மீது வைத்துக் கொண்டு வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முயன்றனர்.
நீண்ட நடந்து செல்லும் நிலை ஏற்பட்டதாலும், மாநாடு திடலில் மேற்கூரை இல்லாததாலும் கடும் வெய்யிலில் சிலர் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது.
காவல் துறையினரின் உதவியுடன் அவர்களை மீட்ட தொண்டர்கள், அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சேர்த்தனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர்.
சிலரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்ததால் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும் ஆம்புலன்ஸ் வாகனம் வெளியே செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களுக்கு குடிநீர் வசதிகள் செய்துதரப்பட்டிருந்தாலும், அவை மக்களால் எட்டும் அளவுக்கு எளிதில் இல்லை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிக்க | தவெக மாநாட்டிற்குச் சென்ற இளைஞர் விபத்தில் பலி!