முகப்பு
தமிழ்நாடு

அரசு பள்ளியில் ஆன்மிக பேச்சாளர் சர்ச்சை பேச்சு: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்ப்பு

விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி

Updated On : 6 செப்டம்பர், 2024 at 12:03 PM
மகாவிஷ்ணு (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 6 செப்டம்பர், 2024 at 11:25 AM

சென்னை அரசு பள்ளியில் ஆன்மிக ரீதியிலான சொற்பொழிவாற்றிய பேச்சாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சில நாட்களுக்கு முன்பு, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்மிகச் சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு என்பவர் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

பள்ளியில் ஆன்மிகக் கருத்து

Advertisement

இந்த நிலையில், மகாவிஷ்ணுவின் சொற்பொழிவின்போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாணவர்களின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கவைத்தது மட்டுமின்றி, அவரது பேச்சைக் கேட்டு பலர் கண்ணீரும் விட்டுள்ளனர். நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, யோக தீட்சை தருகிறேன் என்றெல்லாம் பேசியுள்ளார்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 11:58 AM

கண்டித்த ஆசிரியர்

சொற்பொழிவின்போதே, அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவைக் கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, பள்ளிகளில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தக் கூடாது என ஆசிரியர் வாதிட்டுள்ளார். இருப்பினும், வாதிட்ட ஆசிரியரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்த பிறகும், மகாவிஷ்ணுவின் சொற்பொழிவு தொடர்ந்துள்ளது.

எதிர்ப்புகள்

இந்த நிகழ்ச்சி தொடர்பான விடியோவையும் தனது யூடியூப் பக்கத்தில் மகாவிஷ்ணு வெளியிட்டுள்ளார். விடியோ வெளியானதும், இணையவாசிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துடன், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி என்று பதிவிட்டுள்ளார்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 11:58 AM

விரைவில் கடும் நடவடிக்கை

மேலும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பள்ளிக்கு சென்று, ஆய்வு நடத்தியுள்ளார்.

தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது ``இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செய்தி பரவியவுடன் நான் இங்கு வந்துவிட்டேன்.

இப்போது மாணவர்களுடன் பேசவுள்ளேன். மாணவர்களிடம் அவர்கள் விதைத்த கருத்துகளை மாற்றவுள்ளோம். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது 4 நாள்களுக்குள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எடுக்கப்படுகிற நடவடிக்கை மூலம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் யாரும் இதுபோன்று செய்ய மாட்டார்கள்.

உங்கள் எல்லாருடைய உணர்வுதான் முதல்வருக்கும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கும் உள்ளது’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.