சொத்து வரி உயர்வால் சென்னையில் வாடகை கட்டணம் உயரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு!
வீட்டிற்கு வெள்ளையடிக்க கூட வழியின்றி வசிக்கும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஸ்டாலின் அரசின் கொடுமையால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும்.
இதனால் மாணவர்கள்,இளைஞர்கள்,வேலை தேடுபவர்கள் என பாமர மக்கள் அனைவரும் பாதிப்படையும் நிலை ஏற்படும்.
சொத்து வரியா? மக்களின் சொத்தை பறிப்பதற்காக வரியா?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி சாா்பில் வீடுகள், கட்டடங்களுக்கு விதிக்கப்படும் சொத்துவரியை மேலும் 6 சதவீதம் உயா்த்துவதற்கான தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதில் கடந்த 5 ஆண்டில் மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் வரி நிா்ணயிக்கப்படுவதாகவும், அதனடிப்படையில் தற்போது வரி உயா்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ரூ.1,000 வரி செலுத்துபவா்கள் கூடுதலாக ரூ.60 செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே இவ்விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் டி.ஜெயக்குமாரும் இணைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.