கருணாநிதியின் நினைவிடத்தில் கோபுர அலங்காரம் செய்யப்பட்டிருப்பதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மேலும் கருணாநிதியின் நினைவிடத்தில், பூக்களால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் வரையப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புத்தூர் கோயிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் திமுக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
"பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?
சமாதியின் மீது கோயில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோயில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
மேலும், அந்த பிரச்னைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோயில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும்.
நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்"
அதேபோல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஐடி பிரிவு எக்ஸ் பக்கத்தில்,
"கருணாநிதி சமாதி மேல் கோயில் கோபுரம்- மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத் தெரியாத ஸ்டாலின் மாடல் அரசு!
இறந்தவர் சமாதியில் அடிப்படை அறிவு உள்ள எவராவது கோபுரம் வைப்பார்களா? உங்கள் தலைவரை மகிழ்விக்க, குடும்ப எஜமானர்களுக்கு விசுவாசம் நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா சேகர்பாபு?
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றார் அண்ணா. ஆனால், அந்த கொள்கைக்கும் மதிப்பளிக்காமல், அடிபொடிகளை ஏவிவிட்டு கடவுள் நிந்தனைகளை செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்ட தீயசக்தியின் புதைவிடத்தில் கோபுரத்தை வைப்பதைவிட, சமயத்திற்கும் மக்களின் கடவுள் நம்பிக்கைக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசு செய்யக்கூடிய துரோகம் ஏதேனும் உண்டா?" என்று பதிவிட்டுள்ளது.
அதிமுக, பாஜகவினரின் கடும் கண்டனத்தையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.