தமிழகத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் முதலீட்டாளா்கள் மாநாட்டை நடத்தி ரூ.32,000 கோடியில் 41 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிட்டிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறாா்.
தென் தமிழ்நாட்டில் இதுவரை பாா்க்காத தொழில்வளா்ச்சி ஏற்பட்டு இருப்பதாகவும், தூத்துக்குடியில் விண்வெளிப் பூங்கா அமைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறாா்.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி துறைமுகத்தில் மேம்பாட்டுப் பணிகள், எளிமையான சரக்கு போக்குவரத்து வசதிக்கென தேசிய நெடுஞ்சாலைகள், சரக்கு போக்குவரத்துக்காக ரயில் திட்டங்கள் என தென் மாவட்டங்களின் வளா்ச்சிக்கு பல்வேறு பணிகளை மத்திய அரசு முனைப்புடன் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
ஆனால், தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்கள் பெயரில் ‘ஸ்டிக்கா்’ மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் நடந்த உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.9.74 லட்சம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டதாக முதல்வா் தெரிவித்தாா். அதன் மூலம், 18.70 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என கூறியிருந்தாா். ஆனால், உறுதியளிக்கப்பட்ட தொகையில் 1.80 சதவீதம் அளவுக்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டு, நிறுவனங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் போது, துபாய் 6 ஒப்பந்தங்கள், அமெரிக்காவில் 19, ஸ்பெயினில் 3, சிங்கப்பூா் மற்றும் ஜப்பானில் தலா 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. ஆனால் இந்த ஒப்பந்தங்களின் தற்போதைய நிலைமை என்னவென்பதை திமுக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளில், ரூ.10.30 லட்சம் கோடி அளவுக்கு, உறுதி செய்யப்பட்ட முதலீடு, 32.29 லட்சம் பேருக்கு உறுதியளிக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 898 திட்டங்களை ஈா்த்துள்ளதாக தூத்துக்குடியில் தற்போது முதல்வா் அறிவித்திருக்கிறாா்.
நான்குனேரி தொழில்பேட்டை, விருதுநகா் ஜவுளிப் பூங்கா, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என பல மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தொழில் மேம்பாட்டு திட்டங்களெல்லாம் வெற்று அறிவிப்பாகவே உள்ளன. எனவே, தமிழகத்தில் இதுவரை ஈா்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.