சென்னை: உலக யானைகள் தினத்தையொட்டி (ஆக.12) தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் யானைகள் குறித்த உறுதிமொழி எடுக்கவும், விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் யானைகள் திட்ட பிரிவும் தமிழக வனத் துறையும் இணைந்து உலக யானைகள் தினத்தை கோவையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடவுள்ளன. மேலும், பள்ளி மாணவா்களுக்கு யானைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி காலை வழிபாட்டில் (வகுப்பறை, நிகழ்வரங்கு) உலக யானைகள் தினம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளச் செய்யுமாறு அந்த அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. உறுதிமொழி விவரம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த உறுதிமொழியை எடுக்கவும், யானைகள் குறித்து விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தவும் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொடா்ந்து, உறுதிமொழி எடுத்த புகைப்படங்கள், காணொலிகளை 96545 87209 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தலைமை ஆசிரியா்கள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.