தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து, விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு!
ஆம்னி பேருந்து, விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பது பற்றி...
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையை அடுத்து ஆம்னி பேருந்து மற்றும் விமானக் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என நாளைமுதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கும் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
Advertisement
ரயில்கள் மற்றும் அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு அதிகரித்துள்ளனர்.
சென்னையில் இருந்து திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் ரூ. 4,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட்டுகள் ரூ. 2,000 -க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதேபோல், விமானங்களின் கட்டணமும் மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை செல்லும் விமானங்களின் கட்டணம் ரூ. 23,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்து மற்றும் விமான கட்டணங்கள் அதிகரிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.