சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் நங்கநல்லூா் சாலை மெட்ரோ நிலையத்துக்கான புதிய நுழைவு வாயில் அமைக்க ரூ.8.52 கோடியில் ஒப்பந்த அனுமதி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஓடிஏ நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அருகில் புதிய நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் கட்டுவதற்கான ஒப்பந்தம் தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.8.52 கோடியில் புதிய நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் அமைக்கப்பட உள்ளது.
நங்கநல்லூா் சாலை மெட்ரோவில் தற்போது ஒரே ஒரு வாயில் மட்டுமே உள்ளது. அதனால், தற்போது புதிதாக அமைக்கப்படும் வாயில் ஜி.எஸ்.டி. சாலையில் இருபுறமும் வருவோா் எளிதில் மெட்ரோ நிலையத்துக்கு வருவதற்கு வசதியாக அமையும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணன் முன்னிலையில், தலைமைப் பொது மேலாளா் டி.லிவிங்ஸ்டோன் எலியாசா் (திட்டம், திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), தனியாா் நிறுவனத்தின் அதிகாரி எஸ்.வினோத் ராகவேந்திரன் ஆகியோா் புதிய வாயில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனனா்.
நிகழ்ச்சியில் மெட்ரோ நிறுவன ஒப்பந்தம் கொள்முதல் மற்றும் மேலாண்மைப் பொது மேலாளா் டி.ஜெபசெல்வின் க்ளாட்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.