மூப்பனார் நினைவுநாள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மரியாதை!
மூப்பனார் நினைவிடத்தில் தேசிய ஜனநயாகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் தமாகா நிறுவனருமான ஜி.கே. முப்பனாரின் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள ஜி.கே. முப்பனாரின் நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ரவி பச்சமுத்து, தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே. சதீஷ் உள்ளிட்ட மலர் மரியாதை செலுத்தினர்.
தமிழிசை சௌந்தரராஜன் மூப்பனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், மூப்பனார் பிரதமர் ஆவதை பலர் தடுத்தனர். அப்துல்காலம் பிரதமர் ஆவதை தடுத்தார்கள், தற்போது சிபி.ராதாகிருஷ்ணன் வருவதை திமுக விரும்பவில்லை, தமிழருக்கு திமுக ஆதரவு அளிக்காததில் இருந்தே இவர்களது பொய் முகம் கிழிக்கப்பட்டுள்ளது.
ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் வந்திருந்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும், ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம் என்று கூறினார்.
தன்னலமற்ற தலைவராக விளங்கியவர் ஐயா மூப்பனார் அவர்கள். பெருந்தலைவர் காமராஜர் வழியில், தனது அரசியல் பாதையை அமைத்துக் கொண்டவர். தூய்மையான அரசியல் தலைவராக விளங்கியவர் என்று தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.