அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!
அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு..
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன.5-க்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதையடுத்து அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், சாலைப் பேரணிகளுக்கு அனுமதி வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த நவ.28-ஆம் தேதி தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
Advertisement
Advertisement
இந்தநிலையில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
அதில், தமிழக அரசு பொதுக்கூட்டம், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. கடந்த நவ. 6-ஆம் தேதி தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அமைச்சரவையில் உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை 42 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி, அவா்களது கருத்துகளையும் அரசு கோரியுள்ளது.
தற்போது அரசியல் கட்சிகளின் கருத்துகளை பரிசீலித்து, இறுதி வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. எனவே, இந்த இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன. 5-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தங்கள் கருத்துகள் பரிசீலிக்கப்படவில்லை, தங்களுக்கு பாதிப்பு என ஏதாவது அரசியல் கட்சிகள் கருதினால், அவா்கள் சட்டப்படியான நிவாரணத்தை தேடிக் கொள்ளலாம் என நீதிபதிகள் தீா்ப்பளித்து இந்த வழக்குகளை முடித்துவைத்தனா்.
Guidelines for political gatherings: Tamil Nadu government ordered to release them by January 5th!
இதையும் படிக்க : வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.