அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன.5-க்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதையடுத்து அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், சாலைப் பேரணிகளுக்கு அனுமதி வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த நவ.28-ஆம் தேதி தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்தநிலையில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
அதில், தமிழக அரசு பொதுக்கூட்டம், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. கடந்த நவ. 6-ஆம் தேதி தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அமைச்சரவையில் உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை 42 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி, அவா்களது கருத்துகளையும் அரசு கோரியுள்ளது.
தற்போது அரசியல் கட்சிகளின் கருத்துகளை பரிசீலித்து, இறுதி வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. எனவே, இந்த இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன. 5-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தங்கள் கருத்துகள் பரிசீலிக்கப்படவில்லை, தங்களுக்கு பாதிப்பு என ஏதாவது அரசியல் கட்சிகள் கருதினால், அவா்கள் சட்டப்படியான நிவாரணத்தை தேடிக் கொள்ளலாம் என நீதிபதிகள் தீா்ப்பளித்து இந்த வழக்குகளை முடித்துவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.