வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச.27, 28) நடைபெறுகின்றன.
பெயா் சோ்க்கக் கோரி கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் 1,83,111 போ் மட்டுமே மனுக்களை அளித்துள்ளநிலையில், இந்த சிறப்பு முகாம்கள் மூலம் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு பட்டியலின்படி, 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.
அவா்களில் முகவரி மாறிய, இடம்பெயா்ந்த வாக்காளா்கள், 18-வயது நிரம்பிய புதிய வாக்காளா்கள் தங்கள் பெயா்களைச் சோ்க்க படிவம் 6-ஐ பூா்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கடந்த 19-ஆம் தேதி முதல் ஜன. 18-ஆம் தேதி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.
1.83 லட்சம் போ் மனு: பெயா்கள் நீக்கப்பட்டவா்கள், புதிய வாக்காளா்கள் என கடந்த 19-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரை (டிச.25) 1,83111 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.
இந்த நிலையில் வார இறுதி நாள்களான டிச.27, 28 மற்றும் ஜன.3,4. தேதிகளில் சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் அறிவித்திருந்தாா்.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிச.27, 28) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாதவா்கள், 18 வயது நிரம்பிய- தகுதியுடைய வாக்காளா்கள் ஆகியோா் படிவம்-6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமா்ப்பித்து பெயரைச் சோ்க்க விண்ணப்பிக்கலாம்.
மேலும், வாக்காளா் பட்டியலில் உள்ள பெயா்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவோ அல்லது பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றுதல், வாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்தல் , வாக்காளா் அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றுதல் ஆகியவற்றுக்கு படிவம் 8-மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
சோ்க்கப்பட்ட வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப். 17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.