தஞ்சாவூர் : தொடர் விடுமுறையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துள்ளதால் நகர பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போதிய காவலர்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் - மக்கள் அவதிக்குள்ளாகினர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோவில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தை காண தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
தற்போது தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் பல மணி நேரம் வரிசையில் நின்று பெருவுடையாரை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பெரிய கோவிலின் அழகை குடும்பத்துடன் சுயபடம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளதால் பெரிய கோவில் பகுதியில் வாகன நிறுத்தம் முழுவதும் வாகனங்கள் நிரம்பியுள்ளன.
அருகில் உள்ள அரசு மருத்துவமனை சாலை, நீதிமன்ற சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சாலைகளில் வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்தியுள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உரிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இல்லாததால் வாகன ஓட்டிகளும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.