பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு வழங்குவதை பாஜக விரும்பவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவின் மகளிர் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மற்றவர்கள் பேசுவார்கள் என்றும், பெண்களின் ஆதரவோடு திமுக மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் எனவும் குறிப்பிட்டார்.
திருப்பூர் காரணம்பேட்டையில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இன்று (டிச., 29) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
ராஜஸ்தானில் பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சில குழுக்கள் கூறி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் செல்போன் தொழிற்சாலையில் அதனை அசெம்பிள் செய்வதே பெண்கள்தான்.
உள்ளாட்சியில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு தந்தது திமுக. அதனை உருவாக்கியவர் கருணாநிதி. உள்ளாட்சி அமைப்புபோல சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். ஆனால், பெண்கள் இடஒதுக்கீட்டை பாஜக விரும்பவில்லை.
மகளிருக்கு சுயமரியாதை, தன்னம்பிக்கை தந்தது உரிமைத் தொகை திட்டம். பெண்கள் படிக்கக் கூடாது என அடிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், அதனை உடைத்தெறிந்து புதுமைப்பெண் திட்டத்தைக் கொண்டுவந்தது திமுக.
1.30 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இதுவரை ரூ. 28,000 கொடுத்திருக்கிறோம். முதல்வராக என்னுடைய முதல் கையெழுத்து விடியல் பயணத் திட்டத்திற்குதான்.
திராவிட இயக்கமும் நமுடைய தலைவர்களும் செய்த புரட்சியின் விளைவாக பெண் விடுதலை, மகளிர் முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. இன்று அனைத்து கட்சியிலும் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளதற்கு நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம்.
தமிழ்நாட்டில் பெண் மேயர்கள்தான் அதிகம் உள்ளனர். திராவிட இயக்கத்தால் பெண்கள் அடைந்த வளர்ச்சியை மற்றவர்கள் சொல்ல வேண்டும்.
இங்கு கூடியுள்ள கூட்டம், வுமன் பவரில் திமுக மீண்டும் பவருக்கு வருவதை உறுதி செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.