திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கஞ்சா பயன்பாடு இல்லை என்று அவர் கூறியதாக செய்திகள் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
"தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது பூஜ்யமாக இருப்பதாகவே அமைச்சர் கூறியுள்ளார். தவறான தகவலை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளது.
அதேபோல திருத்தணியில் சிறுவர்களால் தாக்கப்பட்ட வட மாநில இளைஞர் இறந்ததாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்ற பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது.
முன்னதாக சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர்,
"திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள்களை கட்டுப்படுத்தி போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கிறோம். அதிமுக ஆட்சியில்தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் இருந்தது. பான்பராக் உள்ளிட்ட பொருள்களுக்கு தமிழகத்தில் மட்டும்தான் தடை விதித்திருக்கிறோம். கர்நாடகத்தில் தடை விதிக்கவில்லை. அங்கிருந்து வருவதனால் எல்லைகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கஞ்சா பயிரிடுவது பூஜ்ய சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தி எங்குமே இல்லை. குற்றச்சாட்டு சொல்பவர்கள் எங்கே கஞ்சா விற்கப்படுகிறது என்று கூறினால் நடவடிக்கை எடுப்போம்.
கஞ்சா பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் கஞ்சா பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.