புள்ளியியல் ரீதியாக வடகிழக்குப் பருவமழை முடிவடைந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிடும் டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்திரன் வடகிழக்குப் பருவமழை நிறைவடைந்தது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெய்யக்கூடிய மழைப்பொழிவை புள்ளியியல் அடிப்படையில் வடகிழக்குப் பருவமழை என கணக்கிடப்படும்.
அவ்வாறு பார்க்கும்போது அக். 1 முதல் இன்று டிச. 31 வரை தமிழ்நாட்டில் சாராசரியாக 440 மி.மீ. மழை பதிவாக வேண்டும். இந்தாண்டு 430 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 3% குறைவு என்றாலும் இயல்பு என்றே எடுத்துக்கொள்ளப்படும்.
மாவட்ட வாரியாக பார்க்கும்போது திருவள்ளூர், திருவாரூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இயல்பிற்கு அதிக மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இயல்பிற்கு குறைவான மழையும் பிற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பான அளவில் மழை பதிவாகியுள்ளது.
சென்னை ஏரிகள், மேட்டூர் அணை, பவானிசாகர், அமராவதி, பெரியார், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, சாத்தனூர் அணை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து நீர் நிலைகளிலும் நீர் இருப்பு 85% முதல் 100% வரை இருப்பதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.
இந்தாண்டு இயல்பிற்கு அதிக மழை பதிவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் நவ. 15 ஆம் தேதி வரை நிடித்த வலுவான Negative IOD மற்றும் சாதமற்ற கடல் சார்ந்த போக்கின் காரணமாக பருவமழை இயல்பான அளவில் முடிவடைந்திருக்கிறது, இயல்பாக வடகிழக்குப் பருவமழை காலத்தில் புயல்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்தாண்டு இலங்கை, இந்தோனேசியா நாடுகளில் டிட்வா, சென்யார் போன்ற புயல்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தமிழ்நாட்டில் பாதிப்பு குறைந்தது.
இந்தச் சூழலிலும் நவம்பர் இறுதி இரண்டு வாரங்களில் பெய்த மழையில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைப் பணிகள் பெரிதாக பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் பருவமழை புள்ளியல் ரீதியாக முடிவடைந்திருந்தாலும் முழுமையாக விலகவில்லை.
கிழக்கு திசை காற்றின் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு சென்னை, கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்பட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை பதிவாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பதிவாககூடும். இதன் காரணமாக ஜன. 2,3 தேதிகளில் குற்றாலம், திற்பரப்பு உள்ளிட்ட அருவிகளில் நீர் பெருக்கு எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் குறைந்து காணப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.