கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி ஆஜர்
கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சங்கர் ஆஜரானார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சங்கர் ஆஜரானார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் உள்ளூர் போலீஸார் நடத்திய விசாரணையின்போது தனிப்படையில் இருந்த உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், வேலுசாமி, மகேஷ் குமார் ஆகியோர் நேரில் ஆஜராக சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
Advertisement
அதே போல், இந்த எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்துவந்த ஊழியர் தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகவும் போலீஸார் தனியாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
இவ்வழக்கில் தினேஷ் குமார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டபோது ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற டிரைவர் கபீர், கொடநாடு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சங்கர் ஆகியோரும் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டது.
நேற்று முன் தினம் காவலர் மகேஷ் குமார் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அதிமுக நிர்வாகி சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில் இன்று(பிப். 27) அவர் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.
கொடநாடு மேலாளர் நடராஜனிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் கடந்த மாதம் சம்மன் வழங்கினார். ஆனால் அவர் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து விரைவில் அவருக்கும் சம்மன் வழங்கி நேரில் அழைத்து விசாரிக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.