அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண விழா, சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ளார். இருப்பினும், அமித் ஷாவின் வருகையின்போது, அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், மகாத்மா காந்தியின் புகழை பாஜகவினர் சீர்குலைப்பதாகக் கூறியதுடன், அமித் ஷாவின் வருகையின்போது கறுப்புக்கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, சத்யமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, ``மகாத்மா காந்தியின் புகழை அண்மைக் காலமாக பாஜகவினர் சீர்குலைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவரின் இடத்தில் சவாக்கரை நிலைநிறுத்துவதைத்தான் பாஜகவினர் திட்டமாக வைத்துள்ளனர். ஆனால், மனிதர்கள் உள்ளவரையில் மகாத்மா காந்தியின் புகழ் நீடித்திருக்கும்.
மேலும், தமிழகத்துக்கு வருகை தரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, காங்கிரஸார் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.