கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து! மாணவர்கள் 2 பேர் பலி!
செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் விபத்துக்குள்ளானதைப் பற்றி...
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர், மாணவி என இருவர் பரிதாபமாக பலியாகினர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் (ரயில் எண் 56813)) மோதியுள்ளது. தகவலறிந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காவல் துறையினருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் இருவர் பலியாகினர். அவர்களில் சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணி மகள் சாருமதி (16), மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் சங்கர்(47), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஷ்வேஸ் (16), நிவாஸ்(13), சுப்பரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் செழியன்(15) அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை பார்க்க வந்த அண்ணாதுரை (55) மீது ரயில்வே மின்கம்பி விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் கடலூர் - மயிலாடுதுறை வழியே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் வேன் மீது 2 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
A train hit a school van carrying children near Chemmanguppam in Cuddalore.
இதையும் படிக்க : கோயில் காவலாளி கொலை வழக்கு! விசாரணை அறிக்கை இன்று தாக்கல்!