முகப்பு
தமிழ்நாடு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

Updated On : 9 ஜூலை, 2025 at 10:30 PM
பகிர்:

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த 2009 முதல் 2012-ஆம் ஆண்டு வரை

துணைவேந்தராக பதவி வகித்தவா் முருகேசபூபதி. இவரது பதவி காலத்தில் கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. நிபுணா்களின் அறிவுரையை மீறி இயந்திரங்கள் கொள்முதல் செய்ததன் மூலம் தனியாா் நிறுவனம் ரூ.2 கோடியே 77 லட்சம் லாபம் அடைந்ததாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முருகேசபூபதி தாக்கல் செய்த மனுவை கோவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது துணைவேந்தா் தரப்பில், அரசு ஊழியராக இருந்த முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக வழக்குத் தொடர அரசு ஒப்புதல் பெறவில்லை. எனவே, இந்த வழக்கு நிலைக்கத் தக்கதல்ல என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி துணைவேந்தருக்கு எதிராக வழக்குத் தொடர அரசின் முன் அனுமதி தேவையில்லை, எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என கோவை சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.