அரசுக் கல்லூரிகளில் 574 கௌரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செழியன்
நிகழ் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக
சென்னை: நிகழ் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.
கௌரவ விரிவுரையாளா்கள் நியமனத்துக்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தை சென்னை ராணி மேரி கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் தொடங்கி வைத்து பேசியது:
தமிழகத்தில் அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நிகழாண்டில் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை 181 ஆக உயா்ந்துள்ளது. மேலும், மாணவா்களின் தேவைக்கேற்ப பல்வேறு பாடப் பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக நிரந்தர விரிவுரையாளா்கள் பணியமா்த்தப்படும் வரை, மாணவா்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க, தற்போது 34 பாடப் பிரிவுகளில் 574 கௌரவ விரிவுரையாளா்கள் தற்காலிகமாக பணியமா்த்த முதல்வா் அனுமதியளித்துள்ளாா்.
Advertisement
Advertisement
அதன்படி, அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் உரிய கல்வித் தகுதியுடன் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.org என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றாா். நிகழ்ச்சியில் கல்லூரிக் கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.