பொறியியல் சேர்க்கை: 2.81 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடர்பாக...
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று வரை 2.81 லட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த மே 7-ல் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. இன்று(ஜூன் 2) மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதில் 1,20,807 மாணவர்களும் 1,00,579 மாணவிகளும் ஆக மொத்தம் 2,21,386 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்பவும், நவீன தொழில்நுட்பத்திற்கேற்பவும், 12 பாடப்பிரிவுகள் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளன.
இதனால் அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவார்கள்.
ஜூன் 6 வரை விண்ணப்பப் பதிவு செய்ய காலம் உள்ளதால் மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பொறியியல் சேர்க்கைக்கான தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தார்.