கையெழுத்து இயக்கத்துக்கு வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை: அன்பில் மகேஸ் எச்சரிக்கை!
கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட மாணவர்களை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு சேகரிப்பதற்காக, பள்ளி மாணவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு சேகரிக்கும் வகையில், சமக்கல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பில் பொதுமக்களிடையே பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமைமுதல் தொடங்கப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தில் சில மாணவர்களும் கையெழுத்திட்டு ஆதரவளித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், கையெழுத்துக்காக பள்ளி மாணவர்களை வற்புறுத்துவதும், பிஸ்கட் தருவதாகவும் பாஜகவினர் கூறுவது போன்ற விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது, பள்ளிகளின் வாசல்களில் நின்றுகொண்டு, மாணவர்களின் கைகளை இழுத்து, வற்புறுத்தலாக கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட வைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மாணவர்களை அச்சுறுத்துவது போன்று உள்ளது.
இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான புகார்கள் பெறப்பட்டால், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.