எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். மக்களுக்கு தொண்டு ஆற்றவே அரசியலுக்கு வந்தேன். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும் நிலைப்பாடும் கிடையாது.
சாதி மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு தமிழனாக, இந்தியனாக யாதும் ஊரே யாவரும் கேளீர் என இயல்பாகவே வாழ்ந்து வருகிறேன். எல்லோருக்கும் சம நீதியும், சம பாதுகாப்பும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று உளமாற நினைப்பவன்.
சிறுபான்மையினரை பாதுகாத்து அரவணைத்து அன்பு செய்வதை தலையாய கடமையாகக் கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நான், என்றைக்கும் உங்களுக்கு துணையாக இருப்பேன். என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம்,
ஆனால் நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை. மக்களின் பன்முகத்தன்மையை முழுமையாக ஏற்கும் இயக்கம் அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நான் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியின் மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.