டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு உள்ளது: உயர் நீதிமன்ற கிளை கருத்து
டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு உள்ளது என்று உயர் நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை: டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், டாஸ்மாக் ஊழல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டாஸ்மாக் ஊழல் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அரசே மது விற்பனை செய்கிறது. ஆனால், டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல்களை அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
டாஸ்மாக்கில் நடக்கும் ஊழல் குறித்து கருத்துக் கூறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தங்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என 3 மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மதுரை டாஸ்மாக்கில் நடக்கும் மாமூல் வசூல் குறித்து பேட்டி அளித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டாஸ்மாக் மேலாளர் ராஜேஸ்வரி, ஊழியர் செல்வம் இணைந்து வசூல் வேட்டை நடத்துவதாக, அந்த ஊழியர்கள் பேசியிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ஊழல் புகாரில் பறிமுதல் செய்யப்படும் ஆவணங்களைப் பார்க்கும்போது டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ நடப்பது மட்டும் தெரிகிறது என்று கூறியிருக்கிறார்.