வாழப்பாடி அருகே பாமகவின் ராமதாஸ் - அன்புமணி குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கடும் மோதலால் எம்எல்ஏ கார் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள். இவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர். இவருக்கும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களுக்கும் சேலத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.
அடிக்கடி அருள் தொலைபேசி எண்ணுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்தும் வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இதுகுறித்து அருள் காவல் நிலையத்தில் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், பாமக எம்எல்ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் இன்று(நவ. 4) வாழப்பாடியில் உள்ள கட்சி நிர்வாகி இல்லத்தின் நிகழ்ந்த இறுதிச் சடங்கில் பங்கேற்று, வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது அன்புமணி ஆதரவாளர்கள் அருள் சென்ற கார் மீது கல்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ராமதாஸின் ஆதரவாளர்களும் கல்விச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், உருட்டுக்கட்டையால் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் அருளின் கார் சேதமடைந்தது. காருக்குள்ளே அமர்ந்திருந்த அருளை கட்சி நிர்வாகிகள் பாதுகாத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் சேலம் எஸ்பி அலுவலகத்தில் முறையிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். ராமதாஸ் ஆதரவாளர்கள், அன்புமணி ஆதரவாளர்கள் என இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: 10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.