தென் மாவட்டங்களில் கனமழை! குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!
தென் மாவட்டங்களில் கனமழை பெய்வது பற்றி...
நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நவம்பர் 18(இன்று) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்
நெல்லை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் தேனி, மதுரை, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மற்றும் தென்காசியில் சில மணி நேரங்களாக கனமழை பெய்தது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் நிலையில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.