சிதம்பரம்: சிதம்பரம் அருகே மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் பாய்ந்ததில் மூவர் மரணமடைந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.சாத்தமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று காற்றுடன் கன மழை பெய்ததில், உயரழுத்த மின்கம்பி மீது விழுந்து மின்கம்பி அறுந்து விழுந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியம் சி.சாத்தமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அருந்ததியர் தெருவில் புளியமரம் ஒன்று மின்கம்பம் மீது விழுந்ததில், மின்கம்பம் மற்றும் மின்கம்பி அருகே இருந்து வீடுகள், தேவாலயத்தின் மீது விழுந்துள்ளது.
இதில் வீட்டின் அருகே உள்ள தேவாவலயத்தின் வெளியே அமர்ந்திருந்த அந்தோணி மகள் மரியம்சூசை (70), மரியம் சூசை மனைவி பிளவுன்மேரி (60), ரோசாப்பூ மனைவி வனதாஸ்மேரி (70) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் மூவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஏசிபிள்ளை மகன் கனகராஜ் (58) படுகாயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி விஜிகுமார், வட்டாட்சியர் கீதா மற்றும் மின்வாரியத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு விண்ணப்பம் வழங்க சென்னையில் வசித்து வரும் மரியம் சூசையும், பிளவுன்மேரியும் சொந்த ஊருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
சொந்த ஊருக்கு வந்த அவர்கள் இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்தது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஓரத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நஷ்டஈடு வழங்க மார்க்சிஸ்ட் கம்யூ கோரிக்கை
மின்சாரம் பாய்ந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் வட்டம் சி சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழை காரணத்தினால் புளியமரம் மீது மின்கம்பி அறுந்து விழுந்து அருகே இருந்த வீடுகளில் மீது விழுந்தது.
வீட்டில் குடியிருந்த மரியம் சூசை , பிளவுன்மேரி, வனதாஸ்மேரி ஆகியோர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் கனகராஜ் என்பவர் பலத்த காயத்துடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் சாத்தமங்கலம் கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது.
உயிரிழந்தவர்கள் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களாவர் (அருந்ததியர்). எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. வங்கக் கடலில் உருவாகிறது சென்யார் புயல்! பெயரின் அர்த்தம் தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.