‘சென்னை ஒன்’ செயலியில் விரைவில் மாதாந்திர பயண அட்டை பெறலாம்
சென்னை ஒன் செயலியில் மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி பற்றி...
‘சென்னை ஒன்’ செயலி மூலம் கட்டணம் செலுத்தி மாதாந்திர பயண அட்டையை பெற்றுக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
சென்னையில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கிய ‘சென்னை ஒன்’ செயலியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய இந்தச் செயலியைப் பயன்படுத்தி மாநகா் பேருந்து, மெட்ரோ, புகா் ரயில்களில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை பெற்று சிரமமின்றி பயணிக்க முடியும்.
நாட்டிலேயே முதல்முறையாக, அனைத்துப் பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ‘சென்னை ஒன்’ செயலியை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பயன்படுத்தலாம்.
Advertisement
இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒருசில நாள்களிலேயே சுமாா் 1.30 லட்சம் போ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினா். 15 நாள்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இச்செயலி மூலம் பயணச்சீட்டு பெற்றுள்ளனா். பொதுமக்களிடையே இச்செயலிக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து, ‘சென்னை ஒன்’ செயலியில் மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதற்கான பணிகளை சென்னை மாநகா் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும், இப்பணிகள் விரைவில் முடிவடைந்து, இதற்கான வசதி செயலியில் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.
இந்த நிலையில், பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சென்னை ஒன் செயலி மூலமே மாதாந்திர பயண அட்டையைப் பெறும் வசதியும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.