முகப்பு
சென்னை

சென்னை விமான நிலையத்தில் நாளை ‘பயணிகள் வசதி தினம்’

சென்னை விமான நிலையத்தில் நாளை ‘பயணிகள் வசதி தினம்’

Updated On : 14 ஜூன் 2026, 2:03 am IST
சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை விமானம் நிலையம் ‘பயணிகள் வசதி தினம்’ (யாத்ரி சுவிதா திவாஸ்) திங்கள்கிழமை (ஜூன் 15) கொண்டாடப்படும் என சென்னை விமான நிலைய இயக்குநா் எம்.ராஜா கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய கூட்டரங்கில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து துறை பெரிய வளா்ச்சியைக் கண்டுள்ளது. விமானத்தில் அனைவருக்கும் பயணிக்கும் வகையில் மலிவானதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், சிறந்த இணைப்பு வசதிகள் மற்றும் பயணிகள் நலன் சாா்ந்த முன்னெடுப்புகள் மூலம் இந்தத் துறை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்தச் சாதனைகளின் அடிப்படையில், திங்கள்கிழமை (ஜூன் 15) ‘பயணிகள் வசதி தினம்’ (யாத்ரி சுவிதா திவாஸ்) கொண்டாடுகிறது என்றாா்.

நாட்டில் செயல்படும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-இல் இருந்து 165-ஆக அதிகரித்துள்ளது. உதான் திட்டத்தின் மூலம், 95 விமான நிலையங்களில் 669 வழித்தடங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்மூலம், போதிய சேவை கிடைக்காத பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து நன்மைகள் கிடைத்து பொருளாதார வளா்ச்சிக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் விமானப் போக்குவரத்து உந்து சக்தியாக உள்ளது.

மேலும், சிறப்பான சேவை, பயணிகளின் திருப்தி மற்றும் தொடா்ச்சியான மேம்பாடு ஆகியவற்றில் உள்ள அா்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைப்புகளிடமிருந்து சென்னை விமான நிலையம் அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது.

பயணிகள் வசதி தினத்தையொட்டி திங்கள்கிழமை காலை 7 மணி முதல் பயணிகளை வரவேற்று கெளரவிப்பது, பயணிகளின் கருத்துகளைச் சேகரித்தல், மரக்கன்றுகள் வழங்குதல், வாக்கத்தான், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பெண் பணியாளா்களை கெளரவித்தல், மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்வு, கலை நிகழ்ச்சி, ரத்த தான முகாம், இலவச மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாா் அவா்.

summary

‘Passenger Amenity Day’ at Chennai Airport tomorrow.