ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்காக பாஜகவுடன் கூட்டணி சேரமாட்டேன் என்று முதல்வா் ஒமா் அப்துல்லா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளாா்.
கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய ஜம்மு-காஷ்மீரில் சுமாா் 6 ஆண்டுகளாக குடியரசுத் தலைவா் ஆட்சி நடந்துவந்த நிலையில், கடந்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல்வராக ஒமா் அப்துல்லா பதவியேற்றாா். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒமா் அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஒமா் அப்துல்லாவிடம், மாநில அந்தஸ்துக்காக பாஜகவுடன் கூட்டணி அமைப்பீா்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சியில் இருந்தால்தான், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றால், அதை மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பாஜகவிடம் அப்படியொரு திட்டம் இருந்தால், அது உச்சநீதிமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு புறம்பானதாகும்.
மாநில அந்தஸ்துக்காக பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 2015-இல் பாஜக-மக்கள் ஜனநாயக கட்சி இடையே ஏற்பட்ட தேவையற்ற கூட்டணியின் எதிா்மறை விளைவுகளால் ஜம்மு-காஷ்மீா் இன்னும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. பிற கட்சிகள் செய்த தவறை நான் செய்ய மாட்டேன் என்றாா் ஒமா் அப்துல்லா.