முகப்பு
தமிழ்நாடு

சிறப்பு தீவிர திருத்தம்: நவ. 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம், வாக்குத் திருட்டை முறியடிப்போம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Updated On : 29 அக்டோபர், 2025 at 8:34 AM
பகிர்:

தமிழ்நாட்டிலும் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம், வாக்குத் திருட்டை முறியடிப்போம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே, பிகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.

மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நவ. 2ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க | விஜய்யின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் - நயினார் நாகேந்திரன்

summary

Nationwide SIR All-party meeting on Nov. 2

முழு கட்டுரையைப் படிக்க →